எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம், பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் – பிரடெரிக் எங்கெல்ஸ்
ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் மற்ற வல்லரசு/வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளாலும், இனவெறி/ஆதிக்க அரசுகளாலும் வதை பட்டுக் கொண்டிருக்கும் பல தேசிய இனங்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு இனத்தவன் கல்லெறிகிறான், இன்னொருவன் மதத்தின் தலைமையின் கீழ் செல்ல, மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடுகிறான், அதே மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடிக் கொண்டு அடக்குமுறையை காட்டுபவனிடம் தன்னாலியன்ற அத்தனை எதிர்ப்புகளையும் முள் வேலி முகாம்களுக்குள்ளிருந்து செய்கிறான். இன்னொரு இனமோ கண்ணுக்கு கண்ணையும் பல்லுக்கு பல்லையும் பிடுங்கிப்பார்த்தது, மக்களை ஒன்று கூட்டி ஓலமிட்டுப் பார்த்தது, கற்களை வீசிப்பார்த்தது. நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மனம் வந்தவர்களுக்கு ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. இன்னமும் மக்களைத் துடிப்புடன் வைத்திருக்க அம்மண்ணின் கவிஞர்கள் உதவியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அம்மண்ணின் கவிஞர்களின் முக்கிய கவிதைகளை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். இன்று நேற்றல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. என்னை விட அதிக வயது கண்ட புத்தகம் இது. மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் புத்தகம் படித்த போது மஹ்மூத் தார்விஷ் பற்றி இணையத்தில் தேடினேன். அப்போது பலஸ்தீனக் கவிதைகள் என்ற இந்நூல் மின்நூலாகக் கிடைத்தது.
மஹ்மூத் தார்விஷ், பௌசி அல் அஸ்மர், ரஷீத் ஹூசைன், சலீம் ஜிப்றான், தௌபிக் சையத், அந்தொய்னா ஜபாறா, பத்வா துகான், சமீஹ் அல் காசிம், மூயின் பசைசோ ஆகிய ஒன்பது பாலஸ்தீனக் கவிகளின் கவிதைகள் இந்நூலில் தொகுத்திருக்கிறார்கள்.
மஹ்மூத் தார்வீஷின் கவிதைகளிலிருக்கும் எதிர்ப்பும் தீர்க்கமான வார்த்தைப் பயண்பாடுகளும் ஏற்கனவே அறிந்தவை தான் என்றாலும். தன் மீதும் தன் இனத்தின் மீதும் அடக்குமுறைக்கெதிராக இவருடைய பசியெடுத்த வாய்கள் கவிதைகளைப் பாடிச் செல்கின்றன. என் கண்களும், உதடுகளும், என்னுடைய தன்னுணர்வும் இருக்கும் வரை எதிரிக்கு எதிராக நின்று, விடுதலைக்கான போரை நான் பிரகடனம் செய்வேன், என்னும் இவருடைய கவிதைகள், அடக்கு முறைக்கெதிராக மட்டுமே காற்றில் கரைந்து செல்கிறது, கேட்கும் உள்ளங்களில் விடுதலைக் கான குமுறலை கொதித்தெழச் செய்யும் விடுதலைக் கீதங்கள் இவருடையவை. இத்தொகுப்பிலிருக்கும் நம்பிக்கை என்னும் இவருடைய கவிதை பாலஸ்தீன மண்ணுக்கு மட்டுமல்ல, போராடும் ஒவ்வொரு மண்ணுக்கும் தற்காலிகத் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கச் செய்யும் உற்சாகப் பாணத்திற்கு ஒப்பானது.
உனது பாத்திரத்தில் – இன்னும்
சிறிது தேன்
எஞ்சி உள்ளது.
ஈயைத் துரத்து
தேனைப் பேணு
என்கிறார் மஹ்மூத் தார்ஷ்வி. தேன் என்றும் கெட்டுவிடாது, ஆனால் ஈக்களுக்கு இறையாக்காமல் பின் வரும் சந்ததிக்கு பத்திரப்படுத்தச் சொல்லும் அளவுக்கு நம்பிக்கையை விதைத்துச் செல்கிறார். இவர் இறந்த பின்னும், பாலஸ்தீனத்தில் குண்டடி பட்டு இடிந்து வீழ்ந்துவிடாத வீட்டின் ஒவ்வொரு பாத்திரத்திலும் ஈக்கு இறையாக்காமல் தேன் மிச்சம் உள்ளதுதான். ஈக்கள் ஏவுகணை ஏறி வந்தபோதும், தேன் மிச்சம் இருக்கிறது.
எனது நண்பனைப் பற்றி
எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர்.
எப்படி அவன் சென்றான்…
துப்பாக்கி வேட்டுக்கள்
அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின
தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம்.
நான் அவனது காயங்களைப் பார்த்தேன்
அதன் பரிமாணங்களைப் பார்த்தேன்
நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்
குழந்தையை இடுப்பில் ஏந்திய
ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே!
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்.
“நான் போராடத் துணிந்தவன், ஏனெனில் நான் அரேபியன்” என்று சொல்லும் பௌசி அல் அஸ்மாரின் கவிதைகளோ இன்னொரு வகையானவை. நான் என் ஆன்மாவை அடகு வைக்காத அராபியன் அதனால் தடுப்புக் காவலில் இருக்கிறேன் என்கிறார். அவருடைய நகரங்களிலும், வயல் வெளிகளிளும் வீசிச் சென்ற சுதந்திரக் காற்றை சுவாசித்தவர், அந்த சுதந்திரக் காற்றை மீண்டும் சுவாசிக்க தன் கவிதைகளை கூர் தீட்டியிருக்கிறார்.
சாத்தியமற்றதை
என்னிடம் கேளாதே
என் நண்பனே
என்னை என் நாட்டை
விட்டு போகுமாறு
உன்னால் கேட்க முடியாது
றஷீத் ஹூசைன், பாலஸ்தீனிய அரபுக் கவிதைகளில் அரசியலை புகுத்திய முன்னோடிகளில் முதலாமவர். அம்மக்களின் துயர நிலையைப் பாடும் இவர் கவிதைகள் தங்களுக்குள்ளிருக்கும் துரோகிகளையும் அதே நேரத்தில் சுட்டத்தவறுவதில்லை. இவருடைய கவிதைகள் கால, தேச வேறுபாடுகளைக் கடந்து ஒடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு இன மக்களையும் குறிப்பிட்டு பாடுகிறது.
இருண்ட கூடாரங்களில்
சங்கிலிகளில்
எனது மக்களை சிறையிட்டுள்ளனர்.
வாய் மூடி இரும் என ஆணையிட்டுள்ளனர்
அவர்களேதும் முறையிட்டால்
இராணுவச் சவுக்கால்
மரணத்தால்
பசியால்
அச்சுறுத்துகின்றனர்.
—————————————————————-
எங்கள் மத்தியில்,
இன்னும் ஒரு கும்பல்
எஞ்சியுள்ளது.
அவமானத்தை
அது சாப்பிடுகின்றது.
தலைகுனிந்து நடந்து செல்கின்றது.
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
நக்கும் ஒருவனை
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்.
சலீம் ஜிப்ரானுடய கவிதைகள் தன்ன்னை அடிக்க வருபவனை நோக்கி ஒரு கணம் ஒரேயொரு கணம் உன் முதுகைத் திரும்பிப் பார் என்று சொல்வதைப் போல் அமைந்திருக்கின்றன.
ஓ!
நாசி முகாம்களில் இறந்தோரின் ஆன்மாக்களே,
தூக்கில் தொங்கும் இம்மனிதன்
பெர்லினில் பிறந்த ஓர் யூதன் அல்ல
தொங்கும் இம்மனிதன்
என் போல் ஓர் அராபியன்.
உங்கள் சகோதரர்கள்
அவனைக் கொன்றனர்
சியோனில் வாழும்………..
உங்கள் நாசி நண்பர்கள்.
எங்கள் நம்பிக்கையை, எங்கள் போராட்டத்தை உன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது, எங்கள் தலைமுறைகள் போராடிக் கொண்டேயிருக்கும் நீ அடக்கும் வரை, எங்கள் பசி தீவிரமாகும் போது உன் பற்களுக்கிடையேயிருந்து கூட எங்களுக்கான உணவை நாங்கள் சேகரிப்போம், உன் மார்பின் மீது நாங்கள் ஒரு பெருங்சுவரைப் போல நீண்டு நிற்போம் என்னும் தௌபீக் சையதுவின் கவிதைகள் என்றென்றைக்கும் போராட்டத்தைத் உயிர்ப்போடு வைத்திருப்பவை.
ஊசித் துவாரத்துள் யானையைச் செலுத்தலாம்
பால்வீதியில் பொரித்தமீன் பிடிக்கலாம்
முதலையைக் கூட மனிதனாய் ஆக்கலாம்
இவையெல்லாம் உமக்கெளிது.
ஆயினும்
சுடர்விடும் எமது நம்பிக்கை ஒளியினை
துன்புறுத்தி அழிக்கவோ
எமது பயணத்தின் ஓர் அடியினைக் கூட
தடுத்துவிடுவதோ
உமக்கு சாத்தியமற்றது.
இங்கு நாங்கள் இரத்தம் சிந்துவோம்
இங்கு எமக்கோர் பழைமை இருந்தது
எதிர்காலம் ஒன்றும்
இங்கெமக்குள்ளது
வெல்ல முடியாதவர் இங்கு நாங்களே…
ஆகவே
எனது வேர்களே!
ஆழச் செல்க, ஆழச் செல்க!
எத்தனை நம்பிக்கையை இவருடைய கவிதைகள் விதைத்துப் போகிறது. மூவாயிரம் மைல்கள் தொலைவிலிருப்பவர்களுக்கு நம்பிக்கையை விதைக்குமானால் களத்திருந்தவர்களுக்கு எத்தனை உற்சாகத்தைத் தந்திருக்கும்.
அடக்குமுறைக்கெதிராக கொதித்தெழும் ஒவ்வொரு மனித மனமும் பறந்து சென்று இந்தப் பாலஸ்தீனக் கவிகளோடு சேர்ந்துகொள்ளவேச் செய்யும், அத்தனை வீரியமான வார்த்தைகளை இட்டு நிரப்பிய வெடிகுண்டுகளைப் போன்ற கவிதைகளைச் சமைக்கும் இவர்களது வார்த்தைகள் அடிமை விலங்குகளை அரித்தெடுக்கும் அமிலங்களாக பொங்கிக் கொண்டேயிருக்கின்றன.
நீங்கள் எங்களுக்கு காயங்களைத் தந்த போதும், எங்கள் எலும்புகளை நொறுக்கிய போதும், நாங்கள் உங்களுக்கு எங்கள் நாட்டின் ரோஜாப்பூக்களையும் எங்கள் இசையை உங்களுக்கு இசைத்து காட்டவும் வந்துள்ளோம். ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்டபோதும் பொறுமை காத்த நாங்களே உயர்ந்தவர்கள், அந்த பூக்களும், இசையும் எங்களுக்கு சொந்தமானவையே, நாங்கள் காதலுடனும் அன்புடனும் பேசுவது இதுவே இறுதி முறை, என்று தங்கள் போராட்டம் அடுத்த கட்டமாக ஆயுதத்தை நோக்கித் திரும்பப்போவதை ஒரு போர் பிரகடணமாகவே ஒரு கவிஞர் போர்பறையை அறைகிறார். அவர், அந்தோய்னா ஜபாறா.
இந்தியப் பெண்களை மதமும் அதன் மாயக்கரங்களும், சமையலறைக்குள் கட்டிபோட்டுவிட்டன, மதத்தின் மாயக்கரங்களைப் பின்னிருந்து இயக்கிக் கொண்டிருப்பவை ஆணின் அடிமனத்திலிருக்கும் அகோரப்பசி என்றால் மிகையாகாது, அங்கே, போராட்டம், பெண்ணின் புர்க்காக்குள்ளிலிருந்து வார்த்தைகளை வெளியே கொட்ட வைக்கிறது. இந்த வார்த்தைகள் இருபது ராணுவ வீரர்களுக்குச் சமமானது என்று எதிரியே பயந்தும், வியந்தும் பேசுகிற அளவுக்கு வீரியமான வார்த்தைகளை பத்வா துகானின் கவிதைகள் வீசிச் செல்கிறது. அவருடைய மூன்று கவிதைகள் இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
சிதைவுகளிலிருந்து
சித்திரவதையிலிருந்து
ரத்தம் உறைந்த சுவர்களிலிருந்து
வாழ்வினுடைய
மரணத்தினுடைய
நடுக்கங்களிலிருந்து
புதிய வாழ்க்கை ஒன்று கிளர்ந்தெழவேச் செய்யும்
நம்பிக்கையை தன் மக்களுக்கு விதைத்துச் செல்லும் போதே, தங்களின் வலிமையைச் சொல்லி அந்த வலிமையை எதிரிக்கும் உணர்த்துகிறார்.
அராபிய வேர்கள் இறப்பதே இல்லை
அவை பாறைகளைத் துளைத்து
ஆழமாய்ச் செல்பவை
ஆழ நிலத்திலே
தம் வழியினை கண்டறிபவை
அவை
போராடுபவனை மனிதனாகவும், ஒடுக்குபவனை மனிதகுலத்தின் எதிரியாகவும் சித்தரித்து புதிய விடியல்களை படைக்க அழைக்கும் கவிதைகளைப் பாடிச் செல்கிறார் சமீஹ் அல் காசிம்.
வாழ்க்கையின் சிறப்பு –என்
சிறையிலேயே பிறக்கிறதென்று
நான் நம்புகிறேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வௌவாலாய்
இருக்காதென்று நான் நம்புகிறேன் அம்மா.
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்
என்று சிறையிலிருந்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார், அவருடைய சிறப்பான கவிதைகள் பலவும் சிறையிலேயே எழுதப்பட்டவை.
தன் இனத்தின் ரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும் போது மௌனம் காத்த இந்த உலகையே ஒட்டுமொத்தமாய் சபிக்கும் ஒரு அராபிய கவிஞனின் வார்த்தைகள் உண்மையில் இதயமுள்ளோரை வாட்டவேச் செய்யும்.
நாங்கள் முள் கம்பியின் மீது
கிடக்கும் வரைக்கும்
இந்த உலகின்
தலையணையின் கீழ்
“டைனமைட்” ஒன்றை நாம் பொருத்தி வைப்போம்
என்று சபிக்கும் நேரத்திலே, உண்மையான மனித மனத்தை, அதன் இயல்பையும் சுட்டிக்காட்டி மனிதனாக மாறுங்கள் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
உலகின் ஆண்களே,
உலகின் பெண்களெ,
இப்போது நீங்களெம்முடன் இருங்கள்
மனிதனுக்குரிய கௌரவம் என்பதை
நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம்
மனிதன் என்ற பெயரின் மதிப்பை
நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம்
இப்படி ஒட்டுமொத்த மனித இனத்தையும் அதன் மௌனத்தையும் குலைத்துப் போடும் இந்த குரலுக்குச் சொந்தக்காரர் மூயின் பசைசோ
உண்மையில் ஒரு தேசம், மத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, வேறு எந்த பெயரால், அமைப்பால் அடக்கப்பட்டு கிடந்தாலோ, அடிமை விலங்கை இன்னும் தரித்துக் கொண்டிருந்தாலும், இந்த உலகின் எழுநூறு கோடி மனிதனுள் ஒருவனாவது அடிமை விலங்கை சுமந்து கொண்டு சுதந்திரக் காற்றுக்காய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கவும் நாம் விட்டால், நம்மை நாம் மனிதன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருந்து விட முடியும்? “பரந்து கெடுக உலகியற்றியான்” என்றான் வள்ளுவன், பரந்து கெடுக இவ்வுலகு என்பது பொருத்தமாய் இருக்கும், ஒரு மனிதன் அடிமை விலங்கோடு இருக்கும் போது.
எனது பேப்பரும், பேனாவும், எனது வீட்டின் இடிந்த சுவரின் கல்லும் என்னை “எதிர்த்து நில்” என்று சொல்கிறது என்கிறார் மூயின் பசைசோ. எத்தனை எளிமையான வார்த்தை எதிர்த்து நில், என்பது ஆனால், வீரியமான வார்த்தை. இந்த வார்த்தைக்குள் தான் அடக்குமுறைக்கெதிராய் நிற்கும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு தனி மனிதனையும் சுவாசிக்கச் செய்து கொண்டிருப்பது, அடக்குமுறையிலிருந்து மீண்ட ஒவ்வொரு தேசத்தையும் அடிமை விலங்கை உடைத்தெறியச் செய்தது. </div>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License